திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
IT ல இருக்கறவங்களுக்கு இது ஒரு பெரிய கனவு.
ஆ ஊ-னா அமெரிக்கா அப்பிரிக்கா ஆஸ்திரேலியான்னு பறக்கறாங்க சாரி போறாங்க.
இந்த onsite போவதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன.கொமரபாளையத்து பெண்ணுக்கு 300km தாண்டி பெங்களுருக்கு வேலைக்கு வரும்போது தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட இடையூறுகள் இருந்ததோ அது போலவே onsite போகும்போதும் ஏற்படும். தங்கும் பிரச்சினை, உணவு பிரச்சினை, வேலை நேரங்கள், புதிய பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, உடல் ஆரோக்கியம் என பல விஷயங்கள்.
ஆனாலும் படிப்ப முடிச்சு வேலைக்கு IT கம்பெனில சேரும் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் ஆசை இதுதான். வேலைக்கு சேர்ந்த ரெண்டு வருஷத்தலையே onsite போய்டணும். எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிச்சிரனும்.
இதுக்கு காரணம் வெளிநாட்டுக்கு போறேன்னு பீலா விடறதுக்கும்
ஊற சுத்தரதுக்கும் மட்டுமில்லை. பலருக்கு பலவிதமான நன்மைகள் இருக்கு.
சொந்தக்காரங்கள பொருத்தவரைக்கும்...
அக்காவுக்கு லேப்டாப் தம்பிக்கு ஒரு ஐ-போட், மத்தவங்களுக்கு டப்பா நெறைய சாக்லேட்னு வாங்கிட்டுவந்து குடுக்கறது.
இல்லையா விதவிதமா டிரஸ், கூலிங் கிளாஸ், எக்ஸ்சட்ரா, எக்ஸ்சட்ரா வாங்கிட்டுவரனும்.
Onsite போறது பையனா இருந்தா...
ஒன்னு நல்லா ஊற சுத்திட்டு அவனுக்கு புடிச்சமாதிரி என்ஜாய் பண்ணிட்டு வர்றதுக்கு.
இன்னொன்னு அளவா என்ஜாய் பண்ணிட்டு கெடச்ச வருமானத்துல சொந்த பிசினஸ் இல்ல சொந்த வீடு/கார் வாங்கறது.
அதுவே ஒரு பொண்ணா இருந்தா...
சொந்த ஊர்ல கெடைக்காத ஒரு முழு மனதான சுதந்திரத்தை அனுபவிக்க.
அல்லது அப்பா அம்மாவுக்கு செலவு வெக்காம தன்னோட கல்யாண செலவுகளுக்காக.
எனக்கும் ஒரு காரணம் உண்டு...
பள்ளிப்பருவத்தில் படித்த ஒருசில கம்ப்யூட்டர் படிப்புகளும் +1 +2 வில் படித்த கம்ப்யூட்டர் பாடங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
என் உறவினர்கள் மத்தியில் என் வீட்டை நானும் உயர்த்திப பார்க்க ஆசைப்பட்டு BE படிக்கிறேன் என வீட்டில் கேட்டேன். தங்கையையும் படிக்க வெக்கணும். உனக்கே எவ்வளவு செலவு செய்யறதுன்னு பதில் வந்தது. BSc படித்தால் பெரிய கம்பனிகளுக்கு வேலைக்கு போகமுடியதேனு அழுகைதான் வந்தது. விப்ரோ இன்போசிஸ் போன்ற நிறுவனகள் என் கனவாக இருக்க BSc படித்தால் போதாதே என பயந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் தெரியாதே இந்த கம்பெனில்லாம் BSc மாணவர்களையும் வேலைக்கு எடுப்பாங்கன்னு அதான். BE படிக்க ஆசைப்பட்டு பல வேலைவாய்ப்பு/வழிகாட்டுதல் கட்டுரைகள் படித்ததால் கொஞ்சம் அறிவு வந்து ஒரு நல்ல கல்லூரியில் BSc சேர்ந்தேன்.
பள்ளி கல்வியை முற்றிலும் தமிழில் முடித்த எனக்கு BSc க்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தது ஆரம்பத்தில் சற்றே பிரம்மிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நண்பர்கள், நட்பான ஆசிரியர்கள் என பலவித அனுபவங்கள்.
தமிழ் மீடியமில் படித்த உனக்கு கண்டிப்பாக campus interviewவிலெல்லாம் வேலை கிடைக்காது, அதனால் அவ்வளவு பெரிய கல்லுரியிலேல்லாம் சேர்ந்து ஏன் அப்பா அம்மாக்கு செலவு வைக்கிறன்னு கேட்ட என் சொந்தக்காரர்களுக்கு சரியான பதிலடி கிடைத்தது. மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவின் முன்னணி IT நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அன்றைய தினம் என் அம்மா அப்பாவின் கண்களில் மிளிர்ந்த சந்தோஷமும் பெருமையும் இன்றும் என்னால் மறக்கமுடியாது.
வேலைக்கு வந்து சேரும்போதும் பல பிரச்சனைகள். அவை அனைத்தையும் கடந்து வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வைபற்றி அம்மாவிடம் சொல்லும்போது மகிழ்ந்து போகிறார். காரணம் ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசியும், BE படித்துக்கொண்டிருக்கும் என் தங்கையும், கை இருப்பில் உள்ள 6 பவுன் தங்கமுமே.
உள்ளூரில் வேலை செய்தால் கிடைக்கும் பணத்தைவிட வெளியூருக்கு வந்தால் நெறைய சம்பாதிக்கலாம் என அறியப்பட்டேன்.
இங்குவந்த பிறகு வெளிநாட்டிற்கு சென்றால் மிக அதிகமாக சம்பாதிக்கலாமென. நான் என்ன செய்வது? ஒரு சாதாரணப் பெண்ணாக நானும் விரும்புகிறேன் onsite செல்ல.